திருச்செங்கோடு, செப்.6: திருச்செங்கோடு அரசு மருத்துவமனை சார்பில், அன்னை தெரசா நினைவு தினத்தையொட்டி கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. அரசு மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட பேரணி நான்கு ரத வீதிகள் வழியாக வந்து மீண்டும் மருத்துவமனையை அடைந்தது. இப்பேரணியை மருத்துவ அலுவலர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
மருத்துவர் மகேஸ்வரன், செவிலியர் வசந்தாமணி முன்னிலை வகித்தனர். சுமார் 100 நர்சிங் பயிற்சி கல்லூரி மாணவிகள் பேரணியில் பங்கேற்று கண்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் தட்டிகளை ஏந்திய படி சென்றனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர். முன்னதாக அன்னை தெரசாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது படத்திற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் மரியாதை செலுத்தினர்.