நெல்லை : நெல்லை மாநகர பகுதியில் போலீசார் ரோந்து வாகன கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த நவீன வசதிகளுடன் கூடிய 8 புதிய ரோந்து வாகனங்கள் பாளை ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.நெல்லை மாநகர காவல்துறையில் மாநகர போலீஸ் கமிஷனர் துரைகுமார் தலைமையில் மாநகர மேற்கு துணை கமிஷனர் சுரேஷ்குமார், கிழக்கு துணை கமிஷனர் டிபி சுரேஷ்குமார் மற்றும் பாளை, நெல்லை உதவி கமிஷனர்கள், நெல்லை, டவுன், தச்சை, மேலப்பாளையம், பாளை, பெருமாள்புரம், ஹைகிரவுண்ட், பேட்டை உள்பட 8 காவல் நிலையங்கள் உள்ளன. மாநகர காவல் நிலையங்களுக்கு என (பேட்ரோல்) 8 ரோந்து வாகனங்களில் சுழற்சி முறையில் எஸ்ஐ, ஏட்டு, போலீசார் ஆகியோர் 24 மணி நேரமும் மாநகர பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருப்பர். 8 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து வாகன போலீசார் பணியில் இருப்பர். குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்துவது, தகராறு, கலவரம், திருட்டு, கொள்ளை நடந்த பகுதிக்கு சென்று பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி செய்வது, சோதனை சாவடிகள், மாநகர சாலைகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது உள்ளிட்ட பணிகளில் 24 மணி நேரமும் ரோந்து வாகன போலீசார் இருப்பர். நள்ளிரவு நேரங்களில் மாநகர பகுதிகளில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகள் முழுவதும் கண்காணிப்பது ரோந்து போலீசாரின் பணியாகும். நெல்லை மாநகர காவல்துறையில் உள்ள 8 போலீஸ் நிலையங்களுக்கும் தனித்தனியாக ரோந்து வாகனங்கள் உள்ளன. இவைகள் அனைத்தும் பழைய வாகனங்களாகும். இதனால் குற்ற நிகழ்வு இடங்களுக்கு விரைந்து செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இதைதொடர்ந்து மாநகர போலீஸ் நிலையங்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய 8 புதிய ரோந்து வாகனங்கள் தமிழ்நாடு காவல்துறை மூலம் வாங்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. புதிய ரோந்து வாகனங்கள் பாளை மாநகர ஆயுதப்படையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை மாநகர போலீஸ் கமிஷனர் விரைவில் போலீஸ் நிலையங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது….