திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஒருங்கிணைந்த கட்டிமேடு- ஆதிரெங்கம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் ஜமாத் மன்ற நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு வக்பு வாரிய முதன்மை செயல் அலுவலர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கட்டிமேடு-ஆதிரெங்கம் 8பேர் கொண்ட ஜமாத் மன்ற நிர்வாகத்திற்கு போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவித்திருந்த நிலையில் 8பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தனர். இதனால் தேர்தல் நடத்த வேண்டிய சூழல் இல்லாததால், மனு தாக்கல் செய்த 8 பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் திருத்துறைப்பூண்டி காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் முன்னிலையில், அறிவிப்பு செய்தனர்.