தேனி, ஜூன் 25: தேனியை சேர்ந்த தனியார் நிதி நிறுவனம், ரூ.5 கோடி வரை மோசடி செய்துள்ளதாக கூறி கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 25 பேர் எஸ்பியிடம் புகார் அளித்தனர். தேனி மாவட்டம், சுக்குவாடன்பட்டியில் செயல்படும் தனியார் நிதி நிறுவனம், வடபுதுப்பட்டியை சேர்ந்த பிரேமா என்பவரிடமும், அவரது உறவினர்களிடமும் ரூ.73 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தது. மேலும், வேலைவாங்கித் தருவதாக கூறி ரூ.26 லட்சம் மோசடி செய்தது.
இதுகுறித்து பிரேமா அளித்த புகாரின் பேரில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நிறுவனத்தின் இயக்குநர்களான திருப்பூரை சேர்ந்த சரண்யாதேவி, சரவணன், பாலகுமார், தனபால் மற்றும் மேலாளர் மணிகண்டன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மேலாளர் மணிகண்டனை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் இருந்து 25 பேர் நேற்று தேனி எஸ்.பி அலுவலகத்திற்கு வந்தனர்.
தேனியில் ரூ.99.5 லட்சம் மோசடி செய்த நிறுவனமானது, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கடன் வாங்கித் தருவதாகவும், முதலீட்டு பணத்திற்கு அதிக லாபம் தருவதாகவும் சுமார் 800 பேரிடம் இருந்து ரூ.5 கோடி வரை மோசடி செய்துள்ளதாக புகார் அளித்தனர். இதையடுத்து தேனி போலீசார், மோசடி குறித்து கடலூர் மாவட்ட போலீசில் புகார் அளிக்க வேண்டும். அங்கு வழக்குப்பதிவு செய்தால், தேவைப்பட்டால் தேனியில் கைது செய்யப்பட்டவர்களை கடலூர் மாவட்ட போலீசிடம் ஒப்படைப்போம் என கூறி அனுப்பி வைத்தனர்.