Monday, July 1, 2024
Home » கடலூர் அருகே கொன்று புதைக்கப்பட்ட வாலிபர் உடல் தோண்டி எடுப்பு

கடலூர் அருகே கொன்று புதைக்கப்பட்ட வாலிபர் உடல் தோண்டி எடுப்பு

by Ranjith

 

கடலூர், மே 8: கடலூர் அருகே கொன்று புதைக்கப்பட்ட வாலிபரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த கொலையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சென்னையில் பதுங்கி உள்ளவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே உள்ள புதுக்கடை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் மகன் அன்பரசன்(25). இவர் புதுச்சேரி மாநிலம் சேர்க்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அன்பரசன், பின்னர் வீடு திரும்பவில்லை.

அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால், இது குறித்து ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன அன்பரசனை தேடி வந்தனர். மேலும் புதுக்கடை பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, சம்பவத்தன்று அன்பரசனை சிலர் அழைத்து சென்றது தெரியவந்தது. பின்னர் ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் தேடி வந்தனர். சிசிடிவி கேமரா காட்சியில் பதிவாகி இருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த வாலிபர் புதுக்கடையை சேர்ந்த சந்தோஷ் (20) என்பது தெரியவந்தது. மேலும் அவர் தனது நண்பருடன் சேர்ந்து, அன்பரசனை கொன்று புதைத்ததும் தெரியவந்தது.
விசாரணையில், புதுச்சேரியில் இரண்டு ரவுடி கும்பலுக்கு இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அன்பரசன், சந்தோஷ் உள்ள ரவுடி கும்பலின் எதிர் தரப்பு ரவுடி கும்பலுக்கு அடிக்கடி தகவல் தெரிவித்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில், கடந்த 2ம் தேதி இரவு பணி முடிந்து வந்த அன்பரசனை, சந்தோஷ் உள்ளிட்ட சிலர் சிங்கிரிகுடி சுடுகாட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று மது அருந்தி உள்ளனர்.

பின்னர் அன்பரசனை கட்டையால் தலையில் அடித்து கொன்று, அங்கேயே புதைத்து உள்ளனர். இதையடுத்து அன்பரசனை கொன்று புதைத்த இடத்தை சந்தோஷ் அடையாளம் காட்டினார்.
இந்நிலையில் கடலூர் தாசில்தார் அபிநயா தலைமையிலான வருவாய் துறையினர் மற்றும் கனகசெட்டிக்குளம் மற்றும் ஜிப்மர் மருத்துவ குழுவினர் நேற்று காலை சம்பவ இடத்திற்கு சென்று கொன்று புதைக்கப்பட்ட அன்பரசனின் சடலத்தை தோண்டி எடுத்தனர். மேலும் அங்கேயே பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. சம்பவ இடத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க, கடலூர் எஸ்பி ராஜாராம் தலைமையில், டிஎஸ்பி கரிகால் பாரிசங்கர், இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலர் சென்னையில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் தனிப்படை போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர். விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை கைது செய்த பின்னரே இந்த வழக்கின் முழு விவரமும் தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

19 + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi