கடலூரில் பரபரப்பு வலி நிவாரணி மாத்திரையை போதை மருந்தாக பயன்படுத்தும் மாணவர்கள்

கடலூர், மார்ச் 14: கடலூரில் கல்லூரி மாணவர்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக மாற்றி விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போதைப்பொருட்களுக்கு மாணவர்கள் அடிமையாகி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி ராஜாராம் உத்தரவின் பேரில், சிறப்பு புலனாய்வு பிரிவினர் நேற்று முன்தினம் கடலூர் மாநகரில் பல இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை, போதை மருந்துகளாக மாற்றி மாணவர்கள் பயன்படுத்தும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதைதொடர்ந்து இந்த வலி நிவாரணி மாத்திரையை போதை மருந்தாக பயன்படுத்திய கல்லூரி மாணவன் ஒருவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் தன்னுடைய நண்பர்கள் தனக்கு வழங்கியதாக கூறினார்.

வலி நிவாரணி மாத்திரையை விற்பனை செய்த நான்கு நபர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கவியரசன்(23), கூத்தப்பாக்கத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் சிவக்குமார்(24), செம்மண்டலத்தை சேர்ந்த சிவக்குமார் மகன் நிவாஸ்(23), தாமோதரன் மகன் சுபாஷ்(27) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் வலி நிவாரணி மாத்திரைகளை நேரடியாக கொரியர் மூலம் வரவழைத்து அதனை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. 10 மாத்திரைகளை ரூ.300க்கு வாங்கி, ஒரு மாத்திரை ரூ.50 வரை மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை இவர்கள் Distilled Water எனப்படும் தண்ணீரில் கலந்து அதனை வடிகட்டி, ஊசி மூலமாக தங்களது கை நரம்புகளின் மூலம் செலுத்திக்கொண்டால் 24 மணி நேரத்திற்கு போதையில் மிதப்பதாக அதிர்ச்சி தகவலை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மருந்துகளாக பயன்படுத்திய 5 மாணவர்களின் எதிர்காலம் கருதி அவர்களை எச்சரித்து பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். விசாரணையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இவர்களிடம் இந்த மாத்திரைகளை தொடர்ந்து வாங்கி செல்வதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இதனால் இந்த மாத்திரைகள் மொத்தமாக வரும் கொரியர் அலுவலகத்துக்கு சென்று அவர்களிடம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மருந்துகளாக பயன்படுத்தும் சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்