குளச்சல் : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடல் பகுதியில் தொடரும் சூறைக்காற்று காரணமாக கட்டுமரங்கள் நேற்று 4வது நாளாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகிறது. குளச்சல் பகுதியில் கடந்த 4 நாட்களாக பலத்த காற்று வீசி ருகிறது. கடல் பகுதியில் சூறைக் காற்று வீசுகிறது. இதனால் கடலில் ராட்சத அலைகள் எழுந்து கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கட்டுமரங்கள் மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன. ஆக. 1ம் தேதி முதல் நேற்று(4ம் தேதி) வரை மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று ஏற்கனவே மீன்துறை சார்பில் வானிலை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருந்தது. மழை விட்டுவிட்டு பெய்து வந்தாலும், கடலில் காற்று தொடர்ந்து வீசி வருகிறது. தொடர்ந்து கடல் சீற்றமாக இருந்து வருகிறது. இதனால் நேற்று 4 வது நாளாக குளச்சலில் பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. குளச்சலில் 4வது நாளாக மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை எச்சரிக்கையை அடுத்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் அனைத்தும் நேற்றுமுன்தினம் கரை திரும்பி உள்ளன என்பது குறிப்பிட்டத்தக்கது. அவை குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன….