வருசநாடு, அக்.7: கடமலை மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, சிங்கராஜபுரம் போன்ற பகுதிகளில் மூல வைகை ஆற்றின் கரைகளில் பல கிராமங்கள் அமைந்துள்ளன. இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், சாக்கடை கழிவுகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் குப்பைகளாக மூலவைகையாற்றில் கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மயிலாடும்பாறை பகுதியைச் சேர்ந்த கருப்பையா கூறுகையில், கடமலை மயிலை ஒன்றியத்தில் மூலவைகை ஆறு அனைத்தும் மாசடைந்து வருகிறது. இதற்கு காரணம் வருசநாடு வைகை ஆற்றங்கரையோரம் பகுதியில் மது அருந்துபவர்கள், அங்கேயே பிளாஸ்டிக் கழிவுகளை போட்டு விட்டு சென்று விடுகின்றனர். மேலும் இப்பகுதிகளில் இறைச்சி கடை நடத்துபவர்கள், இறைச்சிக் கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இப்பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரும் கலந்து, மூல வைகை ஆறு மேலும் மாசடைந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.