கடன் பிரச்னை காரணமாக மகனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை: புதுவண்ணாரப்பேட்டையில் சோகம்

தண்டையார்பேட்டை: கடன் பிரச்னை காரணமாக மகனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு கணவன், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் புதுவண்ணாரப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவாஜி (45). இவரது மனைவி வனிதா (32). இவர்களுக்கு வெற்றிவேல் (10) என்ற மகன் உள்ளான். சிவாஜி, புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெரு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 6 வருடமாக  குடும்பத்துடன் வசித்து வந்தார். பூண்டி தங்கம்மாள் தெருவில் தையல் கடை நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தையல் கடையை விட்டுவிட்டு   தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். வனிதா, வீட்டின் அருகிலுள்ள பைப்  விற்பனை கடையில் வேலை செய்து  வந்தார். வெற்றிவேல் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தான்.இந்நிலையில், நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளனர். இன்றுகாலை வெகுநேரம் ஆகியும் இவர்களில் யாரும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த எதிர்வீட்டுக்காரர் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது  சிவாஜியும், வனிதாவும் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி புதுவண்ணாரப்பேட்டை  இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.  அப்போது, தம்பதி தூக்கில் பிணமாக கிடந்தனர். அருகில் அவர்களது மகன் வெற்றிவேல் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான்.  தம்பதியின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மயங்கி கிடந்த சிறுவனை மீட்டு அதே மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை  செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனிடையே, வனிதா எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், ‘‘எங்களுக்கு அதிகளவு கடன் உள்ளது. கடனை எங்களால் கட்ட முடியவில்லை. இதனால்  வாழ்வை முடித்து கொள்கிறோம்” என குறிப்பிட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுவனின் கழுத்தில் காயம் இருந்ததால் அவனை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தம்பதியினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுத்ததால் தற்கொலை செய்தார்களா? அல்லது கந்து வட்டி காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை