சென்னை: மதுரவாயல் அடுத்த வானகரம் வேம்புலி நகரை சேர்ந்தவர் சதீஷ் (28). இவரது நண்பர், அதே பகுதி ராஜிவ் நகரை சேர்ந்த பாலாஜி (22). இருவரும் சுமைதூக்கும் கூலித்தொழிலாளிகள். கடந்த சில மாதங்களுக்கு முன், பாலாஜியின் தாய்க்கு விபத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் மருத்துவ சிகிச்சைக்காக சதீஷிடம் ரூ.50 ஆயிரம் கடனாக கேட்டுள்ளார். சதீஷ் தனக்கு தெரிந்தவர்களிடம் பணம் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், நீண்ட நாட்களாகியும் பாலாஜி, அந்த பணத்தை திருப்பித்தரவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று பாலாஜியின் வீட்டுக்கு போதையில் வந்த சதீஷ், பாலாஜியின் பெற்றோரிடம் கடனை கேட்டு தரக்குறைவாக சத்தம்போட்டு பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, சதீஷிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். அப்போது சதீஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலாஜியை குத்த முயன்றுள்ளார். சுதாரித்துக்கொண்ட பாலாஜி, அந்த கத்தியை பறித்து சதீஷை குத்தியுள்ளார். அவரிடமிருந்து சதீஷ் தப்பியோடியுள்ளார். ஆனால் பாலாஜி அவரை விடாமல் ஓட ஓட விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சதீஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பாலாஜி தலைமறைவாகிவிட்டார். தகவலறிந்த மதுரவாயல் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சதீஷ் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பாலாஜியை தேடி வருகின்றனர்….