Saturday, October 5, 2024
Home » கடந்த 3 மாதங்களில் திருட்டுபோன வழக்குகளில் சைபர் கிரைம் அதிரடி 163 செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு-எஸ்.பி. நேரில் வழங்கினார்

கடந்த 3 மாதங்களில் திருட்டுபோன வழக்குகளில் சைபர் கிரைம் அதிரடி 163 செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு-எஸ்.பி. நேரில் வழங்கினார்

by kannappan

ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் காணாமல்போன ₹37 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 163 செல்போன்களை மீட்டு மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக அந்தந்த காவல் நிலையங்களுக்கு கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் விவரங்களை திருப்பத்தூர் மாவட்ட சைபர் செல் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனால்,  ₹37 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 163 செல்போன்களை கண்டுபிடித்தனர். கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை உரியவரிடம் வழங்கும் நிகழ்ச்சி ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி, 163 நபர்களை வரவழைத்து செல்போன்களை நேரடியாக உரியவர்களிடம் ஒப்படைத்தார். இதைடுத்து, மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் பேசியதாவது:சட்டவிரோதமாக திருட்டு செல்போன்களை விற்பனை செய்வதும் அதை வாங்கி சிம்கார்டு போட்டு உபயோகிப்பதும் சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் எவரேனும் ஈடுபடுவது சம்பந்தமாக எந்த ஒரு தகவல் கிடைக்கப்பெற்றாலும் உடனடியாக அருகாமையில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல் 24 மணி நேரமும் காவல் கண்காணிப்பாளர் அலுவலக காவல் உதவி எண் மற்றும் வாட்ஸ் அப் எண் 9442992526 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். புகாரின் மீது உடனடியாக சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். இறுதியில், செல்போன்களை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கு அனைவரும் நன்றியை தெரிவித்தனர். இதற்கு முன்னதாக சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரேமா ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர் ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்தும் புகார் அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  இந்த நிகழ்ச்சியின்போது ஏடிஎஸ்பி புஷ்பராஜ், திருப்பத்தூர் டிஎஸ்பி கணேஷ், வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன், ஆம்பூர் டிஎஸ்பி சரவணன், ஆயுதப்படை டிஎஸ்பி விநாயகம் உள்ளிட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், செல்போனை தவறவிட்ட பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.குற்ற சம்பவங்களை தடுக்கும் சிசிடிவி கேமரா சிசிடிவி கேமரா வேண்டும்திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தவிர்க்க மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் பொதுமக்களிடம் பேசும்போது, ‘நாம் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் வசதி படைத்தவர்கள் அனைவரும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். பொருத்த முடியாத நடுத்தர வர்க்கத்தினர் குழுவாக சேர்ந்து தாங்கள் வசிக்கும் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தினால் குற்ற சம்பவங்களை எளிதில் தடுக்க முடியும். அதையும் மீறி குற்ற சம்பவம் நடந்தால் குற்றவாளிகளை சிசிடிவி கேமரா பதிவு மூலம் எளிதில் பிடித்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பல பகுதிகளில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று குற்றவாளிகளை விரைவில் பிடிக்க முடியாமல் இருப்பதற்கு இதுபோன்ற சிசிடிவி கேமரா பொருத்தாமல் இருப்பதும் ஒரு காரணமாக உள்ளது’ என்று கூறினார்….

You may also like

Leave a Comment

thirteen − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi