சென்னை : தமிழ்நாட்டில் 3300 பேருக்கு கரும்பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கரும்பூஞ்சை நோய் பாதிப்பால் 122 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் கொரொனா புணர்வாழ்வு கையேட்டை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். மேலும் டோக்கியோ தமிழ் சங்கம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 20 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 6 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணத்தை கருவியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் [பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘தமிழகத்திற்கு தற்போது வரையிலும் மொத்தமாக 1,57,76,550 வந்துள்ளது.தமிழகத்தில் இதுவரை 1,58,78,600 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தியுள்ளோம். 63,460 தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. ஒரு வயலில் 10 முதல் 12 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் 4 லட்சம் தடுப்பூசி வீணாக்கப்பட்டது. ஆனால் தற்போது மிக கவனமாக தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 1.25 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக போடப்பட்டுள்ளது.ஒரு தடுப்பூசியை பயன்படுத்தும் போது நிச்சயமாக 11 பேர் இருப்பதை உறுதி செய்துவிட்டு செலுத்துவதால் தடுப்பூசி வீணாவதில்லை.தடுப்பூசிகள் விவரத்தை தினந்தோறும் வெளிப்படையாக தெரிவிக்கிறேன்; இதற்கு மேலும் தேவை என்றால் வெள்ளை பேப்பரில் வெள்ளை அறிக்கையாக எழுதி தருகிறேன்.நாளை மறுநாள் தடுப்பூசி தொடர்பாகவும், எய்ம்ஸ் குறித்து பேச ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க சுகாதாரத்துறை செயலாளருடன் டெல்லி செல்கிறோம்.தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும்,’இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்….