பூந்தமல்லி, ஜூலை 18: பூந்தமல்லி காவல் நிலைய போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பூந்தமல்லி பேருந்து பணிமனை அருகே சந்தேகத்திற்கு இடமாக இருவர் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து, போலீசார் இருவரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். சோதனையில் அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 1.5 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராம பரிஹா( 24), சமரா மிதா (42) என்பதும், வட மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து சென்னை புறநகர் பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பூந்தமல்லி காவல் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவுசெய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்….