திருக்கோவிலூர், ஜூன் 2: திருக்கோவிலூர் அடுத்த முருக்கம்பாடி பகுதியில், மணலூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் துர்கா தேவி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முருக்கம்பாடி ஏரிக்கரை அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ரவி மகன் சஞ்சய்(26) என்றும், மணலூர்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து சஞ்சய்யை கைது செய்து, அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.