மேட்டுப்பாளையம், செப். 24: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் கடந்த மாதம் சட்ட விரோதமாக 6 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த பாலுச்சாமி என்பவரது மகன் பழனி மணி (49) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக பழனி மணி மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை எஸ்பி. கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடிக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் நேற்று பழனி மணியை குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்தனர்.