பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த பள்ளிபுரம் கொசஸ்தலை ஆற்றின் மேம்பாலத்தின் கீழ் வாலிபர்கள் கஞ்சா பயன்படுத்துவதாக நேற்று முன்தினம் இரவு மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜுக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து இன்ஸ்பெக்டர், எஸ்ஐ விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது, பள்ளிபுரம் ஆற்றின் மேம்பாலத்தில் கஞ்சா புகைத்து கொண்டிருந்த 5 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கவுண்டர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் (22),
கொண்டக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஹரி பிரகாஷ் (19), மணலி புதுநகரைச் சேர்ந்த தேவகுமார் (19), பட்டமந்திரியைச் சேர்ந்த வினோத் ராஜ் (19), மேலூரைச் சேர்ந்த விஜய சாரதி (20) ஆகியோர் என்பது தெரிய வந்தது. கைதான 5 பேர் மீது மீஞ்சூர், சோழவரம் பொன்னேரி ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதில் 2 வாலிபர்கள் போலீசை கண்டதும் தப்பி விட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.