தூத்துக்குடி, அக். 9:தூத்துக்குடி வடபாகம் இன்ஸ்ெபக்டர் பாலகிருஷ்ணன், தனிப்பிரிவு எஸ்ஐ ரவிக்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாநகராட்சி அறிஞர் அண்ணா மண்டபம் அருகே 4 பைக்குகளில் வந்த நால்வர், சில பார்சல்களை பரிமாறிக் கொள்வதை பார்த்தனர். சந்தேகத்தின் பேரில் உடனடியாக அவர்களை சுற்றி வளைக்க முயன்றனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள், பைக்குகளில் தப்பினர். போலீசார் விரட்டிச் சென்று இருவரை பிடித்தனர். அவர்களில் ஒருவன் 10ம் வகுப்பும், மற்றொருவன் ஐடிஐயும் படித்து வருவதும் தெரிய வந்தது. விசாரணையில் இவர்கள், கஞ்சா பொட்டலங்களை பரிமாறிக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார், பிடிபட்டவர்களிடம் இருந்து 1.250 கிலோ கஞ்சா, 2 பைக்குகள், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில் தப்பியவர்களில் ஒருவர் மட்டக்கடையை சேர்ந்த வினோத்(28) என்பதும், மற்றொருவர் 17 வயது சிறுவன் என்றும் தெரிய வந்துள்ளது. இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். பிடிபட்ட இரு மாணவர்களும் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.