திருப்பூர்,மே 9: திருப்பூர், திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் பூண்டி ஜங்ஷன் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் ஒடீசா மாநிலத்தைச் சேர்ந்த அனித் வாகா (21) என்பதும் அவர் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மார்சல் (24) என்பவருக்கு கஞ்சா கொடுக்க சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து திருமுருகன் பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அனித் வாகா, மார்சல் ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.