சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தை யாரும் அதிமுகவில் ஓரங்கட்ட மாட்டோம் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி 23ம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக பொதுக்குழு நடக்கவிருக்கும், வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் முழுவீச்சில் பொதுக்குழு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஓபிஎஸ், ஈபிஎஸ் 8-வது நாளாக தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; இரட்டை தலைமையால் மாவட்ட செயலாளர்களின் களப்பணி பாதிக்கப்படுவதால் ஒற்றை தலைமை அவசியம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் செயல்வடிவமாக எடப்பாடி பழனிசாமியை பார்க்கிறோம். 99% அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் ஆதரவு தெரிவிக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தலைமையேற்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். அதிமுக தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இபிஎஸ்ஐ ஒற்றைத் தலைமையாக்கும் தீர்மானத்தை ஓபிஎஸ் வழிமொழிய வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தை யாரும் அதிமுகவில் ஓரங்கட்ட மாட்டோம். எடப்பாடி பழனிசாமியை அதிகரிக்கும் தீர்மானத்தை ஓ.பன்னீர்செல்வம் வழிமொழிய வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் யாருக்கும் துரோகம் செய்யாதவர். பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்ற பேச்சுக்கு இடமில்லை. வரும் 23ஆம் தேதி திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். …