சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியில் பாஜ வேட்பாளராக எச்.ராஜா போட்டியிடுகிறார். பாஜ தேசிய செயலாளராக இருந்த எச்.ராஜா, அடாவடியாக ஏதாவது பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வந்தார். இதனால் பாஜ தலைமை அவரது பதவியை பறித்ததோடு, சட்டமன்ற தேர்தல் வருவதால் அடக்கி வாசிக்கும்படி உத்தரவிட்டது. இதனால் கடந்த சில மாதங்களாகவே அமைதியாக இருந்து வந்தார். இதற்கு தலைமையின் பரிசாக காரைக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கையில் எச்.ராஜா போட்டியிட்டு மண்ணை கவ்வினார். இந்த சூழலில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜ வேட்பாளர் பட்டியல் அறிவிக்கும் முன்பே, எச்.ராஜா காரைக்குடி தொகுதியில் தேர்தலுக்கான வேலைகளை ெதாடங்கி விட்டார். எனவே இவரை விட்டு விட்டு வேறொருவரை வேட்பாளராக அறிவித்தால், உள்ளடி வேலைகள் செய்து தோற்கடித்து விடுவார் என்று பயந்தே மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் எச்.ராஜா பேசிய பழைய பேச்சுக்கள் அடங்கிய வீடியோ வாட்ஸ்அப்களில் உலா வருகிறது. இந்த வீடியோவில் நீதிமன்றம் மற்றும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் குறித்து எச்.ராஜா அடாவடியாக பேசிய பதிவுகள் உள்ளன. வீடியோவின் இறுதியில் எச்.ராஜா நாடாளுமன்ற தேர்தலில் வாங்கிய வாக்குகளைவிட மிக குறைவான வாக்குகள் பெற்று தோல்வியடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது வைரலாகி வருகிறது. ‘‘அப்போது பேசிய பேச்சுக்கள், இப்போது வந்து கழுத்தறுக்கிறதே’’ என்று அதிமுக, பாஜ கூட்டணி கட்சியினர் மட்டுமின்றி எச்.ராஜாவே புலம்பி வருகிறாராம். …