ஓடும் பஸ்சில் மாணவன் மீது சரமாரி தாக்குதல் வீடியோ வைரலால் பரபரப்பு குடியாத்தம் அருகே

குடியாத்தம், அக்.2: குடியாத்தம் அருகே ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவன் மீது மர்ம ஆசாமிகள் சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் காந்தி நகரில் உள்ள அரசு கலை கல்லூரியில், கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த மாணவன் 3ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் கல்லூரி முடிந்ததும் இந்த மாணவன் தனியார் பஸ்ஸில் கே.வி.குப்பத்திற்கு சென்று கொண்டிருந்தார். தொடர்ந்து, குடியாத்தம் அடுத்த சென்றாம்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, திடீரென பஸ்சுக்குள் ஏறிய வாலிபர்கள் சிலர், பஸ்சின் இடது பக்கம் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த கல்லூரி மாணவனை சரமாரியாக தாக்கிவிட்டு, கீழே இறங்கி தப்பிவிட்டனர். இதை பார்த்து பஸ்சில் இருந்த பொதுமக்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மர்ம ஆசாமிகள் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்ட கல்லூரி மாணவன் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர், குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பஸ்ஸில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கல்லூரி மாணவனை தாக்கிய மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில், கல்லூரி மாணவனை மர்ம ஆசாமிகள் தாக்குவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

புதிய பஸ் நிலையத்திற்குள் பைபாஸ் ரைடர் பஸ்கள் வர வேண்டும்: அனைத்து கட்சியினர் மனு

சங்கம் வைக்கும் உரிமை கோரி சிஐடியு சாலைமறியல் போராட்டம்

பட்டாசு ஆலை விபத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை