ஓசூர் வாலிபரிடம் ₹17.98 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி, மே 19: ஆன்லைனில், அதிக முதலீடு செய்ய ஆசை காண்பித்து ஓசூர் வாலிபரிடம் ₹17.98 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முனீஸ்வர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (42). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி இவரது செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் வந்தது. அதில், ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்தால் அதிகளவு லாபம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் கொடுத்திருந்த செல்போன் நம்பருக்கு சீனிவாசன் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர்கள் கூறியபடி பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தம் ₹17 லட்சத்து 98 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி எந்த வித லாபமும் கிடைக்கவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்