ஓசூர், மே 18: ஓசூர் ரவுடி கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சொப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திலக் (24). இவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ராம் சேனா நகர செயலாளர் மோகன்பாபு என்பவர் கொலை வழக்கில் கைதாகி, சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த 12ம் தேதி ஓசூர் பெரியார் நகர் டீக்கடை அருகில் நின்று கொண்டிருந்த திலக்கை, டூவீலரில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதுதொடர்பாக, ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கொலையில் தொடர்புடைய ஓசூரை சேர்ந்த சசிகுமார் (24) என்பவர் நேற்று சேலம் மாவட்டம் சங்ககிரி 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிபதி இனியா விசாரித்து, அவரை 7 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து சசிகுமார், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஓசூர் சொப்பட்டி பகுதியை சேர்ந்த திம்மராயப்பா, வெங்கடேஷ், சிவக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இவர்கள் 3 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.