பல்லடம், செப்.4: ஒரே நாடு-ஒரே தேர்தல் கொள்கைக்கு ஆதரவளிக்கிறோம் என்று உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில தலைவர் செல்லமுத்து தெரிவித்தார்.இது குறித்து உஉக தலைவர் செல்லமுத்து கூறியதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையை ஆதரிக்கிறோம். பல்வேறு காலக் கட்டங்களில், பல முறை தேர்தல் நடத்தி மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பது, நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்.
நாடு சுதந்திரம் அடைந்த பின்பு ஆரம்ப கால கட்டங்களில் ஒரே காலகட்டத்தில்தான் அனைத்து தேர்தல்களும் நடந்து வந்தன. மேலும், மக்களிடையே ஒரே ஊர், ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற எண்ணம் வரும்போது, ஜாதி, மத, வெறுப்பு உணர்வுகள் நீங்கிவிடும். எனவே, ஒரே நாடு-ஒரே தேர்தல் என்ற ஒன்றிய அரசின் கொள்கையை, வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.