விருதுநகர், ஜூலை 28: விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் தகவல்: மாவட்டத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்க திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய அமைப்பு 500 எக்டேரில் அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் துறை மூலம் 500 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பயனாளிகளாக இணைப்படுவர். திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் குறைந்தது ஒரு ஏக்கர் நில உரிமை உடையவராக இருக்க வேண்டும்.
தனது சொந்த செலவில ரூ.60ஆயிரம் மதிப்பில் வேளாண் இனங்களாக பயிர் செயல் விளக்கத்திடல், மண்புழு உர தொட்டி, கால்நடை இனங்களான ஒரு கறவை மாடு அல்லது 10 ஆடுகள் மற்றும் தோட்டக்கலை இனங்களான பழ மரக்கன்றுகள், தேனீ வளர்ப்பு பெட்டி போன்றவற்றை திட்ட வழிகாட்டுதல்படி அமைக்க வேண்டும். ரூ.60 ஆயிரம் மதிப்பில் ஒருங்கிணைந்த பண்ணையத்தை உருவாக்கிய விவசாயிக்கு பின்னேற்பு மானியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.
விருதுநகர் மாவட்ட விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து அல்லது வேளாண் உதவி இயக்குநர் அலுவலங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். தமிழக அரசின் சிறப்பினமாக தேர்வாகும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் ரூ.20 ஆயிரம் சிறப்பு மானியம் ரூ.12 ஆயிரம் சேர்த்து ரூ.42 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.