சென்னை: மேற்கு மாம்பலம் நரசிம்மன் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (41), கட்டிட பிளம்பிங் ஒப்பந்ததாரர். இவர், நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு தி.நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பிறகு மாலை வீடு திரும்பிய வெங்கடேசன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.1.75 லட்சம் ரொக்கம் மற்றும் 13 சவரன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீடு முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….