சென்னை: விருகம்பாக்கத்தில் ஒன்றிய பாதுகாப்பு படை ஓய்வு பெற்ற அதிகாரியின் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகர் 1வது தெருவை சேர்ந்தவர் குமார் சுப்பிரமணியன் (61). ஒன்றிய பாதுகாப்பு படை அதியாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகன் புவனேஸ்வரன் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 21ம் தேதி குமார் சுப்பிரமணியன் வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்துடன் வடமாநிலத்திற்கு சுற்றுலா சென்றார். நேற்று முன்தினம் அங்கிருந்து வீடு திரும்பினர். அப்போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 70 சவரன் தங்க நகைகள், வைர நகைகள் மற்றும் ஒரு லேப்டாப், ரூ.10 ஆயிரம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குமார் சுப்பிரமணியன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கைரேகை நிபுணர்களுடன் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிசிடிவி பதிவுகளின் வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்….