ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்

நெல்லை, ஜூலை 5: ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின், 1ம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு, 2024-2025ம் நிதி ஆண்டில், ரூ.1000 முதல் ரூ.25 ஆயிரம் வரை, கல்வி உதவித் தொகை பெறுவதற்காக, மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதற்காக தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் (https://scholarships.gov.in), பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் ஒரு முறை பதிவு மூலம் மட்டுமே சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கென தனியாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின், மைய வங்கி அமைப்பு என்ற தொழில்நுட்பமுறையில், தங்களுடைய சேமிப்புக் கணக்கானது, தேசிய மின்னணு பரிவர்த்தனை வசதிகளை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை, தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவர். இத்திட்டத்தின் கீழ், கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கு, விண்ணப்பதாரர்கள், தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும்.

இதற்கு கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு, மிகவும் முக்கியமானதாகும். பதிவு செய்யப்படாத பள்ளிகள், மற்றும் கல்லூரிகள், https://scholarships.gov.in என்ற, தேசிய கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில், முதலில் பதிவு செய்தல் வேண்டும். பின்பு, அந்த வலைதளத்தில், குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, அனைத்து விண்ணப்பங்களையும் ஆராய்ந்து, ஒப்புதல் வழங்கி, தங்களது கல்வி நிறுவனங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஒருவேளை, கல்வி நிறுவனங்கள், மின்னணு விண்ணப்பங்களை தங்களின் பதிவு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சரிபார்க்காமல், அடுத்தகட்ட சரிபார்க்கும் முறைக்கு சமர்ப்பிக்கும் பட்சத்தில், அந்த விண்ணப்பங்களை மேற்கொண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு செயல்படுத்த இயலாது. 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.08.2024. மற்ற அனைத்து உயர் கல்வி மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 31.10.2024 ஆகும்.

மேலும் விளக்கங்கள் மற்றும் உதவி பெறுவதற்கு மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், திருவிக தொழில் பூங்கா, கிண்டி, சென்னை – 600032. மின்னஞ்சல் – wclwo.chn-mole@gov.in மற்றும் தொலைபேசி எண்: 044-29530169 மூலம் அணுகலாம் என தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி ஒன்றிய நல ஆணையர் கே.ஏ.செபாஸ்டியன் தெரிவித்துள்ளார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை