ஒடுகத்தூர் அருகே பயங்கரம் திருமணமான ஓராண்டில் 2வது மனைவி கழுத்து நெரித்து கொலை- உறவினர்கள் காவல்நிலையம் முற்றுகையால் பரபரப்பு

ஒடுகத்தூர் : ஒடுகத்தூர்  அருகே  திருமணமாகி ஓராண்டில் குடும்ப  பிரச்னை  காரணமாக  2வது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை  போலீசார் கைது  செய்தனர். இதற்கிடையே பெண்ணின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர்  அடுத்த  ஓங்கபாடி  கிராமத்தை  சேர்ந்தவர்  கன்னியப்பன். இவரது மகன்  ரவி(33), கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி குடும்ப பிரச்னை காரணமாக மனைவி பிரிந்து சென்று  விட்டாராம். இதையடுத்து ரவி, ஆம்பூர்  அடுத்த  மேல்சானாங்குப்பம்  கிராமத்தை  சேர்ந்த சங்கர்   மகள்  சத்யாவை (26) கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு 2வதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு சத்யாவை பணம் கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சத்யா, தனது தம்பி தரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு, கணவர் ரவி, மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் ₹50 ஆயிரம் கேட்டு கொடுமை படுத்துவதாக கூறி அழுதாராம். பின்னர் மறுநாள் சங்கர், அவரது குடும்பத்தினர் ஓங்கப்பாடியில் உள்ள ரவியின் வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி பணம் தருவதாக கூறி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் சத்யா தனது தந்தை சங்கரை தொடர்பு கொண்டு, ‘என்னை நம் வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள்’ என்று கூறி அழுதாராம். அப்போது சங்கரிடம் பேசிய ரவி, 2 நாட்கள் கழித்து சத்யாவை அழைத்து வருவதாக கூறியுள்ளார். இதற்கிடையே நேற்று  காலை  ரவியின்  உறவினர் ஒருவர் தரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு சத்யா இறந்து கிடப்பதாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது தந்தை மற்றும் தாய் ஆகியோருடன் ஓங்கப்பாடியில் உள்ள ரவியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, சத்யா கட்டிலில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து கணவன் ரவியிடம் சங்கர் மற்றும் தர் கேட்டதற்கு, சத்யா தூக்கு போட்டு இறந்ததாக கூறினாராம். மேலும், சத்யாவின் கழுத்தில் நகக்கீறல்கள் இருந்ததால், சத்யாவை அடித்து கொலை செய்துள்ளனர். எனவே குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கூறி சத்யாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் வேப்பங்குப்பம்  காவல் நிலையத்தை  திடீரென முற்றுகையிட்டனர். தொடர்ந்து சத்யாவை கொலை செய்த ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சங்கர் புகார் அளித்தார். அதன்பேரில்,  இன்ஸ்பெக்டர்  உலகநாதன், ரவியிடம் நடத்திய விசாரணையில், சத்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ரவி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, வழக்குப்பதிந்து ரவியை  கைது  செய்து  விசாரணை  நடத்தி  வருகிறார்.  இதற்கிடையில் போலீசார் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்னையால் கணவனே மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம்  அப்பகுதியில்  பெரும்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது….

Related posts

மீஞ்சூர் அருகே தோட்டக்காடு பகுதியில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு

சுரண்டையில் கிரைண்டர் செயலி மூலம் வாலிபரை மிரட்டி பணம் பறித்த 9பேர் கைது

திருச்சி அருகே பயங்கரம் இரும்பு கம்பியால் அடித்து பாட்டி கொலை