குளச்சல், நவ. 2 : மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல். மணல் ஆலை நிர்வாகம் நெய்யூர் சி.எஸ்.ஐ மருத்துவமனையுடன் இணைந்து கல்லுக்கூட்டம் சமூக நலக்கூடத்தில் இலவச மருத்துவ முகாம் நடத்தியது. முகாமை கல்லுக்கூட்டம் சி.எஸ்.ஐ. சேகர சபை போதகர் ரிங்கிள் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். உதவி போதகர் கிங்சிலி,பேரூராட்சி தலைவர் மனோகரசிங், துணைத் தலைவர் கனகராஜேஷ், மணல் ஆலை துணை பொது மேலாளர் (சுரங்கம் மற்றும் வள ஆதாரம்)சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இ.சி.ஜி. பரிசோதனை செய்யப்பட்டது. மற்றும் பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், கண்,பல் ஆகியவற்றுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 710 பேர் பங்கேற்று பயன்பெற்றனர். ஐ.ஆர்.இ.எல் அதிகாரிகள்,நெய்யூர் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் கல்லுக்கூட்டம் சபைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.