ஐதராபாத்: ஐதராபாத்தில் பிரபல மருந்து நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, பீரோ முழுக்க கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹெட்ரோ மருந்து உற்பத்தி நிறுவனம் ரெம்டெசிவிர், பவிபிரவிர் போன்ற கொரோனா தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்ய பல்வேறு ஒப்பந்தங்களை போட்டுள்ளது. இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிப்பதற்காக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.ஹெட்ரோ நிறுவனத்துக்கு சொந்தமாக இந்தியா, சீனா, ரஷ்யா, எகிப்து, மெக்சிகோ மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் 25 க்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 6ம் தேதி ஹெட்ரோ பார்மாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 6 மாநிலங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இதில், நிறுவனத்திற்கு சொந்தமான 16 வங்கி லாக்கர்கள் பயன்பாட்டில் இருந்தது கண்டறியப்பட்டது. தனிநபரின் செலவினங்களை நிறுவனத்தின் செலவினங்களில் சேர்த்தது, அரசின் பதிவுக் கட்டணத்தைவிட குறைந்த கட்டணத்தில் நிலம் வாங்கியது போன்ற முறைகேடுகளில் அந்நிறுவனம் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது. இதற்கான ஆதாரங்கள், பென் டிரைவ்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.மொத்தம் ரூ.550 கோடி வருவாயை அந்நிறுவனம் கணக்கில் காட்டாததும் தெரியவந்தது. நிறுவனத்தில் இருந்து ரூ.142.87 கோடி கணக்கில் வராத ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய நேரடி வரிவிதிப்பு ஆணையம் தெரிவித்தது. இதற்கிடையே, மருந்து நிறுவனத்தில் மறைவாக வைக்கப்பட்டிருந்த பீரோ ஒன்றில் கோடிக்கணக்கிலான பணம் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக டிவிட்டரில் நேற்று புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது. அதில் பீரோ முழுக்க 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக உள்ளன. தனிநபரின் செலவினங்களை நிறுவனத்தின் செலவினங்களில் சேர்த்தது, அரசின் பதிவுக் கட்டணத்தைவிட குறைந்த கட்டணத்தில் நிலம் வாங்கியது போன்ற முறைகேடுகளில் அந்நிறுவனம் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டது….