சென்னை: நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் 6 மாடி கொண்ட கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை 2.30 மணியளவில் 6வது மாடியில் இருந்து கரும் புகை வெளியேறியது. இதை பார்த்த செக்யூரிட்டி சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார். அதன்படி நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, கீழ்ப்பாக்கம் பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ விபத்து 6வது மாடி என்பதால் எழும்பூரில் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 104 மீட்டர் கொண்ட ஸ்கை லிப்ட் வாகனம் எடுத்து வந்து வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள கணினி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. அதிகாலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. …