சென்னை: நீதிமன்ற வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள இருப்பதாக தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக்கோரி ராஜ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பின் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செயல்படும் மருத்துவமனையை உபயோகப்படுத்த முடியவில்லை. மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் பயன்படுத்தும் வகையில் கட்டிடங்கள் இன்னும் மாற்றப்படாத நிலை உள்ளது. நீதிமன்ற வளாகத்தை தூய்மையாகவும் பசுமையாக மாற்றி பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில், 19 தூய்மை பணியாளர் வளாகம் முழுவதும் தூய்மை பணியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற தலைமை நீதிபதி, நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிலைகள் துய்மைபடுத்தப்படாமல் இருப்பதை கவனித்தோம். எனவே ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று நானே நேரடியாக ஒரு வாளி மற்றும் துப்புரவு உபகரணங்களுடன் சென்று நீதிமன்றத்தை வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன். இந்த பணிக்கு எனக்கு வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியார்களும் சேர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்….