சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், வேலை வாங்கி தருவதாக பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்ததாக நாகேந்திரகுமார், குமார், மணிகண்டன் உள்பட 7 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவர்களில், மணிகண்டன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகர குற்றவியல் அரசு வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, மனுதாரர் நீதித்துறை என்ற பெயரில், ‘வாட்ஸ் அப்’ குரூப் உருவாக்கி, அதன்மூலம் உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக, ஒரு நபருக்கு 6 லட்சம் ரூபாய் என ஒன்பது பேரிடம் பணம் வசூலித்துள்ளார். ஒவ்வொரு நபரிடம் வசூலித்த தொகையில் 4 லட்சம் ரூபாயை, நாகேந்திரகுமாரிடம் கொடுத்துள்ளார். ஒன்பது பேரிடம் வசூலித்த தொகையில், தலா 2 லட்சம் ரூபாய் என 18 லட்சம் ரூபாயை மனுதாரர் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இந்த மோசடிக்காக இவர்கள் போலியாக உயர் நீதிமன்ற முத்திரைகளை பயன்படுத்தி உள்ளனர். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, மணிகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்….