ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களில் தொய்வு இருக்கக் கூடாது: துறைவாரியாக ஆய்வு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள், தற்போதைய நிலை குறித்து துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களில் தொய்வு ஏற்படாமல் பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை, தலைமை செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகை 10வது தளத்தில், அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும் அரசு துறை செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்களுடனான 2 நாள் ஆய்வு கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் தலைமை செயலாளர் இறையன்பு, அரசு துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.முதல் நாள் ஆய்வு கூட்டத்தின்  இறுதியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நான் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது பார்க்கிறேன். மக்கள் நம் மீது அதிகமான அளவிற்கு, மிகப்பெரிய எதிர்பார்ப்பினை வைத்துள்ளனர். அதனை பூர்த்தி செய்யும் வகையில் உங்கள் பணி சிறப்பாக அமைய வேண்டும். பெரும்பாலான மக்களுக்கு, குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களில் எந்தவிதமான தொய்வும், தாமதமும் இன்றி நீங்கள் பணியாற்றிட வேண்டும். உதாரணமாக, நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம், சாலை அமைத்தல், குடிநீர் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் நீங்கள் அதிக அளவில் தனிக்கவனம் செலுத்தி, குறிப்பிட்ட காலத்தில் அவற்றை நிறைவேற்றிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். கூடுமான வரையில், அனைத்து துறைகளும் திட்டங்களை நிறைவேற்றும்போது, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவற்றை செயல்படுத்த வேண்டும். இதன்மூலம் பணிகளுடைய தரம் மேம்படும், சிறப்பாக இருக்கும், கால விரயமும் குறையும். ஒவ்வொரு துறை செயலாளரும் இதனை தங்களுடைய கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அதேபோல், திட்டங்களை வகுப்பதிலும், திட்டங்களை நிறைவேற்றுவதிலும் அரசு சாராத துறை வல்லுநர்களின் கருத்துகளை, ஆலோசனைகளை பெறலாம். பிற மாநிலங்களில், பிற நாடுகளில் இதுபோன்ற திட்டங்கள் எந்த வகையில் செயல்படுத்தப்படுகின்றன என்பதையும், நம் மக்களுக்கு எவ்வாறு சிறப்பாக அவற்றை வழங்கலாம் என்பதையும் கண்டறிய வேண்டும். Best Practices எங்கு இருந்தாலும், அதனை நாம் நமக்கேற்ற வகையில் பின்பற்றி, மக்களுக்கு அரசு அறிவிக்கும் திட்டங்களின் பயன்களை கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.  மாநிலத்தின் வளர்ச்சி என்பது புதிய தொழில்நுட்பங்களை எந்த அளவிற்கு நீங்கள் திட்ட செயலாக்கங்களிலும், கண்காணிப்புகளிலும் புகுத்துகிறீர்கள் என்பதில்தான் அமைந்திருக்கிறது. ஆண்டாண்டு காலமாக செய்து வருவதையே தொடர்ந்து செய்து வந்தால், புதிய மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படாது என்பதை நாம் உணர்ந்திட வேண்டும். நாம் தற்போது இந்த அரசின் 2வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். முதலாம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், இன்னும் சில அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட வேண்டியுள்ளது. ஆணை வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பல அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது பாராட்டத்தக்கது. அதேசமயம், நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அறிவிப்புகளையும் நாம் துரிதப்படுத்த வேண்டும்.அதேபோல, நடப்பு ஆண்டில் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். இவற்றில் அரசாணை வெளியிடப்பட்ட இனங்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, இம்மாத இறுதிக்குள் தேவையான அரசாணைகள் வெளியிடப்பட வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் அரசாணை வெளியிடப்பட, துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியம். அரசாணைகளை வெளியிடுவது என்பது, திட்ட செயலாக்கத்தில் முதல் படி மட்டுமே என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். போதுமான நிதி ஒதுக்கீட்டுடன் அரசாணைகள் வெளியிடப்பட்ட பின்னர், துறை தலைவர்கள் எவ்வித தாமதமும் இன்றி, அவற்றை நடைமுறைப்படுத்தி, மக்களிடம் திட்டங்களின் பயன்களை கொண்டுபோய் சேர்த்திட வேண்டும். அதுதான் மிகவும் முக்கியமானது.அதிலும் மிக முக்கியமானது, ‘கள அளவில் ஆய்வுகள்’ மேற்கொள்வதாகும். தேவையான இனங்களில், திட்ட செயலாக்கத்தின்போது மக்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும். இவை ஒவ்வொன்றிலும் மாவட்ட ஆட்சியர்களை ஈடுபடச் செய்து, அனைத்து திட்டங்களையும் நீங்கள் நிறைவேற்றிட வேண்டும். பேருந்து நிலைய திட்டங்கள், குடிநீர் மற்றும் சாலை திட்டங்கள், வீட்டு வசதி மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்கள் போன்றவை எல்லாம் மக்கள் பெரிதும் எதிர்பார்க்கக்கூடிய திட்டங்கள் ஆகும். அவற்றை நீங்கள் சிறப்பாக நிறைவேற்றிட வேண்டும். அதேபோல், அரசின் சேவைகளான பல்வேறு சான்றிதழ்கள், கட்டிட அனுமதி, பதிவுகள் மற்றும் உரிமங்கள், தடையின்மை சான்றிதழ்கள் போன்றவற்றை வழங்குவதில், கணினி தொழில்நுட்ப வசதியினை பயன்படுத்தி, அவை தாமதமின்றி வழங்கப்படுவதை துறை தலைவர்கள் கள அளவில் ஆய்வு செய்து, உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் அரசு நிர்வாகத்தை செம்மைப்படுத்தி, அரசு திட்டங்களை மக்களுக்கு முழுமையாக கொண்டு சென்றதாக கருத முடியும். எனவே, மிகப்பெரிய உட்கட்டமைப்பு திட்டமாக இருந்தாலும் சரி, எளிய ஒரு சேவை திட்டமாக இருந்தாலும் சரி, நீங்கள் அனைவரும், ஒரே அர்ப்பணிப்பு உணர்வுடன் இது மக்களுக்கான திட்டம், இதனை விரைவில், செம்மையாக மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன், உங்கள் துறை அமைச்சருடன் இணைந்து, துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர்களை வழிநடத்தி, திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும். அடுத்த ஆய்வு கூட்டத்தில், இந்த திட்டங்களின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்ற அந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.* இன்று 2வது நாள் ஆய்வு கூட்டம்முதல்நாளான நேற்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் சப்ளை, பொதுப்பணித்துறை, எரிசக்தி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகம், வீட்டுவசதி, தொழில், சிறு-குறு தொழில், நிதித்துறை, தகவல் தொழில்நுட்பம், தமிழ் வளர்ச்சி, சுற்றுலா, மனிதவள மேம்பாடு, கைத்தறி, வணிகவரி, பேரழிவு நிர்வாகம், சிறப்பு திட்டங்கள், மதுவிலக்கு, போக்குவரத்து உள்ளிட்ட 19 துறை செயலாளர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். இன்று 2வது நாள் ஆய்வு கூட்டம் நடக்கிறது. இதில் ஆதிதிராவிடர் நலன், வேளாண், கால்நடை, பால்வளம், மீன்வளம், பிற்பட்டோர், சிறுபான்மையினர், கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு, உயர் கல்வி, பள்ளி கல்வி, தொழிலாளர் நலன், ஊரக மேம்பாடு, சுகாதாரம், சமூகநலன், முதல்வரி முகவரி, மாற்றுத்திறனாளிகள், சுற்றுச்சூழல், சட்டம், இளைஞர்கள் நலன் உள்ளிட்ட 19 துறை செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்துகிறார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை