Tuesday, September 17, 2024
Home » ஏழுக்கு அடுத்து எட்டு சென்னை சொன்னது நடந்தது..:விலகினார் டோனி

ஏழுக்கு அடுத்து எட்டு சென்னை சொன்னது நடந்தது..:விலகினார் டோனி

by kannappan

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன்  பதவியை டோனி விட்டுக் கொடுத்ததால், புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.ஐபிஎல் போட்டி 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் சென்னை அணியின் கேப்டனாக  தொடர்ந்தவர் எம்.எஸ்.டோனி. அப்போது அவர் இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்தார்.இடையில் சூதாட்ட புகார் காரணமாக  2016, 2017ம் ஆண்டு சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் டோனி அந்த 2 ஆண்டுகள் பூனே அணிக்காக விளையாடினார்.  பிறகு மீண்டும் சென்னை  அணியின் கேப்டன் ஆனார். சென்னை இதுவரை விளையாடிய 12 தொடர்களில் 11 முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அவற்றில் 9 முறை இறுதி ஆட்டத்தில் விளையாடியது. மேலும் நடப்பு சாம்பியனான சென்னை  4முறை கோப்பையை வென்றுள்ளது.ஆனால் 2020ம் ஆண்டு மட்டும்  7வது இடத்தை பிடித்தது. டோனி ஆட்டமும் சரியாக இல்லை. அதனால் டோனியின்  தலைமை பதவி குறித்து கேள்வி எழுந்தது. அப்போது அணி நிர்வாகம், ‘அவர் 2022ம் ஆண்டு வரை மட்டுமல்ல அவர் விரும்பும் வரை கேப்டனாகவும், அணியிலும் தொடர்வார்’ என்று சொன்னது.ஆனாலும் 2021ம் ஆண்டு சுரேஷ் ரெய்னா கேப்டனாக்குவார்கள் என்ற பேச்சு எழுந்தது. ரவீந்திர ஜடேஜா குறித்தும் பேசப்பட்டது. ஆனால் 2021ல் மீண்டும் டோனி தலைமையில் சென்னை கோப்பையை வெல்ல, யார் கேப்டன் என்ற பேச்சு அடங்கியது. ஆனால் கடந்த ஆண்டு  சமூக ஊடகம் ஒன்றில், ‘சென்னைக்கு அடுத்த கேப்டன் நீங்களா’ என்று ஜடேஜாவிடம் கேட்ட ரசிகரிடம் ‘7க்கு அடுத்து 8 தானே’ என்று வெளிப்படையாக சொன்னார்.   சென்னை அணி நிர்வாகமும் ‘வரவேற்கிறோம் 8! உங்களை 7க்கு பிறகு சந்திக்கிறோம்!’ என்று பகிர்ந்தது.அதாவது டோனியின் சீருடை எண் 7, ஜடேஜாவின் சீருடை எண் 8 ஆகும். ஆக ஓராண்டுக்கு முன்பே ஜடேஜாதான் கேப்டன் என்பதை அணி நிர்வாகம் தீர்மானித்தது தெளிவாகிறது. கூடவே தக்க வைத்த வீரர்களில் ஜடேஜாவுக்கு 16கோடியும், தோனிக்கு 12 கோடியும் ஊதியமாக சென்னை நிர்வாகம் நிர்ணயம் செய்தபோதும் ரசிகர்களுக்கு புரிய ஆரம்பித்தது.அதற்கு விடை இப்போது கிடைத்துள்ளது. டோனி விட்டுக் கொடுத்ததால்  ஜடேஜா கேப்டனாக நியமிக்கபட்டுள்ளார் என்று அணி நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. கூடவே ‘இந்த ஆண்டுடன் சென்னை அணியில் இருந்தும் டோனி விலகுவார். பிறகு ஆலோசகராக, பயிற்சியாளராக தொடர்வார்’ என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்….

You may also like

Leave a Comment

ten + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi