திருப்பூர், நவ.28: திருப்பூர் செரங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரில் தாங்கள் செரங்காடு, பிள்ளையார் கோவில் 4 வது வீதியை சேர்ந்த குமார் என்பவரிடம் மாதம் ஏலச்சீட்டு கட்டி வந்ததாகவும், அந்த சீட்டில் சுமார் 217 பேர் இருப்பதாகவும் இந்நிலையில், குமார் ரூ 1.85 கோடி சீட்டு பணத்தை திரும்ப கொடுக்காமல் மோசடி செய்து விட்டு தலைமறைவாகிவிட்டார் அவரை கண்டுபிடித்து பணத்தை திரும்ப பெற்று கொடுக்கும்படி அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.
அந்த புகாரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினர் குமாரை தேடி வந்தனர். இந்நிலையில், திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் குமார் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அங்கு சென்று குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.