ஏரி மண் கொட்டுவதில் தகராறு இரு தரப்பினர் மீது வழக்கு

மங்கலம்பேட்டை, ஆக 8: மங்கலம்பேட்டை அருகே உள்ள மு.புதூர் கிழக்கு தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் ராஜேந்திரன்(55). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த தாய் மாமனான செல்வராசு என்பவரின் மகன் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரியும் மணிவாசகம் என்பவருக்கும் இடையே வீட்டிற்கு ஏரி மண் கொட்டுவதில் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில், ராஜேந்திரனின் உதட்டை மணிவாசகம் கடித்துள்ளார். இதில், ராஜேந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதில், உதட்டில் தையல் போடப்பட்டதுடன், அவருக்கு 2 பற்களும் உடைந்து போனது.

இதனால், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் ராஜேந்திரன் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து ராஜேந்திரன் மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதேபோல், இந்த சம்பவத்தில், ராஜேந்திரன் கழியால் அடித்ததில் தனக்கு கை முட்டி மற்றும் கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டதாக கூறி மணிவாசகமும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது