கோவை, ஜூலை 9: விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் ஏரி, குளங்களில் இருந்து களிமண், வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கிவைத்தார். அதன்படி, இயற்கை வளங்கள் துறையின் சார்பில், நீர்வளத் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளம் மற்றும் கண்மாய்களிலிருந்து களிமண் மற்றும் வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்து பயன்பெற முடியும்.
இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில், கனிம வளத்துறை இணை இயக்குநர் சரவணன், துணை இயக்குநர் ரமேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா, வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், தமிழ்நாடு முதல்வர் விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்களுக்கு அனுமதி ஆணைகளை வழங்கியதை அடுத்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம் வட்டத்தை சார்ந்த 10 விவசாயிகளுக்கு களிமண் மற்றும் வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கு கட்டணமின்றி எடுத்து பயன்பெறுவதற்கான அனுமதி ஆணைகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.
மேலும், விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலைகள், அவர்கள் சேர்ந்த வட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வண்டல் மண், களிமண் ஆகியவற்றை எடுத்து சென்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.