Sunday, July 7, 2024
Home » ஏரியில் மீன் பிடிக்க சென்ற 2 வாலிபர்கள் மூழ்கி பலி தீயணைப்பு வீரர்கள் சடலங்களை மீட்டனர் தண்டராம்பட்டு அடுத்த கொட்டையூரில்

ஏரியில் மீன் பிடிக்க சென்ற 2 வாலிபர்கள் மூழ்கி பலி தீயணைப்பு வீரர்கள் சடலங்களை மீட்டனர் தண்டராம்பட்டு அடுத்த கொட்டையூரில்

by Karthik Yash

தண்டராம்பட்டு, ஜூன் 23: தண்டராம்பட்டு அடுத்த கொட்டையூரில், ஏரியில் மீன் பிடிக்க சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கொட்டையூர் ஊராட்சியில் 100 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் ஆண்டு தோறும் பொதுப்பணித்துறை மூலம் ஏரியில் உள்ள மீன்கள் ஏலம் விடப்படுவது வழக்கம். ஆனால் இந்து ஆண்டு ஏரியில் உள்ள தாமரை பூக்கள் மட்டும் ஏலம் விடப்பட்டு, பூக்கள் பறிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிலர் ஏரியில் உள்ள மீன்களை வலை மூலம் பிடித்து விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில், கொட்டையூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை(37), மற்றும் அவரது உறவினர் சுப்பிரமணி (35) ஆகிய இருவரும் கடந்த 20ம் தேதி இரவு 11 மணியளவில் மீன் பிடிக்க செல்வதாக வீட்டில் கூறி விட்டு ஏரிக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் வீடு திரும்பவில்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் வாணாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து ஏரி பகுதிக்கு சென்ற போலீசார் மீன் பிடிக்க சென்றவர்களின் இரு சக்கர வாகனம் மற்றும் துணிகள் கரையில் இருந்ததை கண்டதும், தண்டராம்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் அஸ்சோந்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஏரியில் படகு மூலம் தேடினர். ஏரி முழுவதும் தாமரை செடிகள் உள்ளதாலும், மாலை நேரமானதாலும் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. மேலும், போதிய வெளிச்சம் இல்லததால் மீட்பு பணிகள் கைவிடப்பட்டு மீண்டும் நேற்று தொடங்கப்பட்டது. வெகுநேர தேடுதலுக்கு பின்னர் மாலையில் தீயணைப்பு வீரர்கள் இருவரையும் சடலமாக மீட்டனர். அதைத்தொடர்ந்து, இறந்தவர்களின் சடலங்களை போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏரியில் மூழ்கி உயிரிழந்த இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

six − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi