ராஜபாளயைம், செப்.28: ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள அழகை நகரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் காவலர் இல்லை என கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்குமுன் நள்ளிரவு மர்மநபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, பணம் எடுக்க 2 பேர் வந்ததால் மர்மநபர் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து வங்கி நிர்வாகம் சார்பில் ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
எஸ்பி கண்ணன் உத்தரவின் பேரில் டிஎஸ்பி பிரீத்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வி, குற்றப்பிரிவு எஸ்ஐ சக்திகுமார், சைபர்கிரைம் எஸ்ஐ தமிழழகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், மலையடிப்பட்டியில் வசித்து வரும் சிவகிரியை சேர்ந்த சண்முகராஜன் (28) என்பவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.