Sunday, June 30, 2024
Home » எல்லப்பாளையத்தில் அரசு பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க கோரி பெற்றோர்கள் முற்றுகை

எல்லப்பாளையத்தில் அரசு பள்ளியில் ஆசிரியர்களை நியமிக்க கோரி பெற்றோர்கள் முற்றுகை

by Ranjith

 

அன்னூர், ஜூன் 21: கோவை மாவட்டம், அன்னூர் அருகே எல்லப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 235 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். சுக்கிரமணிகவுண்டன்புதூர், வெள்ளாளபாளையம், எல்லப்பாளையம், மச்சான்டிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மாணவ, மாணவியர் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.  இப்பள்ளியில் சேர்ந்த கவின்குமார் என்கிற மாணவர் கடந்த கல்வியாண்டில் அறிவியல் இயக்க போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்று வெளிநாட்டு சுற்றுலாவுக்கு தேர்வு பெற்றுள்ளார். அதேபோல் இங்கு படித்த மாணவர்கள் பலர் உயரிய படிப்பிற்கும், உயரிய வேலைக்கும் சென்றுள்ளனர்.

அன்னூர் வட்டாரத்திலேயே இந்தப் பள்ளியில்தான் அதிக அளவு கணினிகள் உள்ளன. ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ள பள்ளி என சாதனை படைத்துள்ளது. இந்த பள்ளியில் கடந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர் ஒருவர் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். மேலும் ஒரு ஆசிரியை பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து காலி பணியிடங்களுக்கு ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த பெற்றோர் நேற்று மதியம் எல்லப்பாளையம் நடுநிலைப்பள்ளிக்கு வந்தனர். ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும், மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பில்லாமல் கற்பிக்க வேண்டும்.

இல்லாவிட்டால் தங்கள் குழந்தைகளின் கல்வித் தரம் குறைந்து விடும். எனவே வேறு பள்ளிக்கு எங்கள் குழந்தைகளை சேர்த்து விடுவோம் என்று கூறினார். இதையடுத்து வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீ சுதா, தலைமை ஆசிரியை பவளக்கொடி ஆகியோர் பெற்றோரிடம் பேச்சு நடத்தினர். அதில் வருகிற திங்கட்கிழமைக்குள் காலியாக உள்ள பணியிடத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். குழந்தைகளின் கற்றல் எந்த பாதிப்பும் இல்லாமல் நடைபெறும் என்று உறுதி அளித்தனர்.

இது குறித்து பெற்றோர் கூறுகையில், ‘‘6, 7, 8 ஆகிய 3 வகுப்புகளில் 97 மாணவ, மாணவியர் இருக்கின்றனர். 100 மாணவ, மாணவியர் இருந்தால் மட்டுமே கூடுதல் ஆசிரியர் நியமிக்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 3 மாணவர்கள் பற்றாக்குறையால் மற்ற மாணவர்களின் கற்றல் பாதிக்கப்பட்டு அவர்களுடைய கற்றல் திறனும் குறைந்து விடும். எனவே கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும். விரைவில் நியமிக்காவிட்டால் வருகிற செவ்வாய் அன்று போராட்டம் நடத்த உள்ளோம்’’ என பெற்றோர் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

sixteen + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi