கோவை: கோவை சாயிபாபா காலனி கே.கே.புதூர் சின்னம்மாள் தெருவை சேர்ந்தவர் விஜயராஜ்(63). இவர் அங்கு மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் விகாஷ்(32). ஐடி கம்பெனி ஊழியர். இவர் தற்போது வீட்டில் இருந்து வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி இரவு விகாஷ் தனது நிறுவனம் தொடர்பான பணிகளை லேப்டாப்பில் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டில் இருந்த பிஸ்கெட்டை எடுத்து சாப்பிட்டார். மறுநாள் காலையில் அவர் விடாமல் தொடர்ந்து வாந்தி எடுத்தார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில் அவர், சாப்பிட்டது எலியை கொல்ல பயன்படுத்தப்படும் எலி பிஸ்கெட் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் சாயிபாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், விகாஷின் தந்தை மளிகை கடை வைத்து நடத்தி வருவதால் கடை மற்றும் வீட்டில் எலிகளின் தொல்லையை கட்டுப்படுத்த எலி பிஸ்கெட் வாங்கி வைத்திருந்ததும், இரவு பணியின் போது விகாஷ், பிஸ்கெட் என நினைத்து அதனை சாப்பிட்டதும் தெரியவந்தது….