சிவகாசி, ஜூலை 26: சிவகாசி அருகே எரிச்சநத்தம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடங்களை நெடுஞ்சாலை துறையினர் நேற்று அகற்றினர். விருதுநகரில் இருந்து எரிச்சநத்தம், அழகாபுரி, மகாராஜபுரம் வழியாக வத்ராயிருப்புவரை மாநில நெடுஞ்சாலைதுறை சாலை உள்ளது. இதில் எரிச்சநத்தம் மெயின் ரோடு பகுதியில் நெடுஞ்சாலைதுறை மூலம் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதிய வாறுகால் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. வாறுகால் கட்டும் பணிக்காக அந்தப் பகுதியில் ஏராளமான ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடையூறாக இருந்தன.
இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து நேற்று எரிச்சநத்தம் பகுதியில் மெயின் ரோட்டில் உள்ள 30க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடங்களை நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் மதிவாணன் நேரடியாக பார்வையிட்டனர். ஆக்கிரமிப்பு பணிகள் முடிவடைந்த உடன் வாறுகால் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.