தாம்பரம்: தாம்பரத்தில் எமர்ஜென்சி கதவு உடைந்து, பள்ளி மாணவி படுகாயம் அடைந்த விவகாரத்தில், பள்ளி வேன் அனுமதி சீட்டு மற்றும் டிரைவரின் லைசென்சை ரத்து செய்யவும் போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் சேவியர். இவர், சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவன ஊழியர். இவரது மகள் ரியோனா (11). தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 22ம் தேதி காலை வழக்கம்போல பள்ளிக்கு பள்ளி வேனில் சென்று கொண்டிருந்தார். ஸ்பீட் பிரேக்கரில் வேன் ஏறி இறங்கிய போது வேனின் எமர்ஜென்சி கதவு உடைந்து அருகே அமர்ந்திருந்த சிறுமி ரியோனா கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது.இந்த சம்பவத்தில் விபத்துக்குள்ளான பள்ளி வேன் மற்றும் விபத்து நடந்த இடத்தை தென்சென்னை போக்குவரத்து இணை ஆணையர் ஜெயசங்கரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, வேனின் அனுமதி சீட்டை ரத்து செய்யவும், ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார். இதைதொடர்ந்து பள்ளி வேனை தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, வேனின் அனுமதி சீட்டை ரத்து செய்ய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுனரின் லைசென்சை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது….