அய்சால்: மிசோரமில் மிசோ தேசிய முன்னணி கட்சியின் தலைவரும், முதல்வருமான ஜோரம் தங்கா தலைமையில் ஆட்சி நடக்கிறது. இவருடைய மகள் மிலாரி சாங்டே. அய்சாலில் உள்ள மருத்துவமனையில் பிரபல தோல் மருத்துவ நிபுணரிடம் பரிசோதனைக்காக இவர் சென்றார். அப்போது, வெளியே பல நோயாளிகள் காத்திருந்த நிலையில், இவர் மட்டும் நேரடியாக மருத்துவரை பார்க்க உள்ளே நுழைந்தார். ஆனால், முன்பதிவு செய்யாமல் பரிசோதனை செய்ய முடியாது என்று மருத்துவர் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த மிலாரி, அந்த மருத்துவரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டு தாக்கத் தொடங்கினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த ஒருவர், இந்த காட்சியை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இது வைரலானதை தொடர்ந்து, தனது மகளின் செயலுக்காக முதல்வர் ஜோரம் தங்கா மன்னிப்பு கோரியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘தோல் மருத்துவரிடம் எனது மகள் தவறாக நடந்ததற்காக பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன். அவருடைய இந்த செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்த மாட்டேன்,’ என்று கூறியுள்ளார்….