சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், புதிய தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.தமிழகத்தில் கடந்த மே மாதம் ஒரே நாளில் அதிகபட்சமாக கொரோனா தொற்று பரவல் 36 ஆயிரம் வரை இருந்தது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். அதன்படி, கடந்த மே 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை தொடர்ந்து இரண்டு வாரங்கள் எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்று படிபடிப்படியாக குறைய தொடங்கியது.இதையடுத்து, தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக, பாதிப்பு வாரியாக மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தனித்தனியாக தளர்வுகளை அறிவித்துள்ளது.27 மாவட்டங்களில் பேருந்து உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நகைக்கடைகள் மற்றும் ஜவுளிக்கடைகளும் திறக்கப்பட்டுவிட்டன. தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5ம் தேதி காலை 6 மணியோடு நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கை நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. இந்த முறை எஞ்சியுள்ள 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது….