Wednesday, September 18, 2024
Home » என்எல்சி பேச்சுவார்த்தை புறக்கணிப்பு திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு

என்எல்சி பேச்சுவார்த்தை புறக்கணிப்பு திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு

by Karthik Yash
Published: Last Updated on

புதுச்சேரி, ஜூன் 14: கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை குறைந்தபட்ச ஊதியமாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1ம் தேதி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் நிர்வாகத்துக்கு வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜூன் 14ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய தொழிலாளர் துறையின் உதவி ஆணையர் ரமேஷ் என்எல்சி நிர்வாகத்துக்கும், ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகிகளுக்கும் அழைப்பாணை அனுப்பி இருந்தார். அதன்பேரில், நேற்று புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மத்திய தொழிலாளர் துறையின் உதவி ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உதவி ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் சிறப்பு செயலாளர் சேகர், தலைவர் அந்தோனி செல்வராஜ், பொதுச்செயலாளர் செல்வமணி, என்எல்சி நிர்வாகம் சார்பில் துணை மேலாளர்கள் திருக்குமரன், மகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க என்எல்சி ஒப்பந்ததாரர்கள் மற்றும் சொசைட்டி மேலாண் இயக்குநருக்கு உதவி ஆணையர் உரிய முறையில் அழைப்பாணை வழங்கவில்லை. இதனால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை. இதன் காரணமாக பேச்சுவார்த்தையை தொடராமல் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தையை புறக்கணித்து வெளியேறினர்.

இதுகுறித்து சிறப்பு தலைவர் சேகர் கூறுகையில், என்எல்சியில் பணிபுரியக்கூடிய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. சமவேலைக்கு சம ஊதியம் வழங்கவில்லை. ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரை குறைந்தபட்ச ஊதியமாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி நிர்வாகத்திடம் கடந்த 1ம் தேதி வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்தோம். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய தொழிலாளர் துறையின் உதவி ஆணையர் எங்களுக்கும், நிர்வாகத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சொசைட்டி மேலாண் இயக்குநருக்கு முறையாக அழைப்பு விடுக்காததால், அவர்கள் யாரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை நடத்தி பலனில்லை என்பதால், நாங்கள் புறக்கணித்துவிட்டோம்.

வேலை நிறுத்தம் அறிவித்துள்ள பதற்றமான சூழலில் கூட இங்கு தமிழ் தெரியாத உதவி ஆணையரை வைத்து பேச்சுவார்த்தை நடத்துவது சரியாக இருக்காது. எனவே, தமிழ் தெரிந்த அதிகாரியை வைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். என்எல்சியில் நிறைவேற்றப்படாத ஒப்பந்தங்கள் எல்லாம் மீறப்பட்டுள்ளது. நேரடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய தொழிலாளர் துறை, அதனையும் ஒரு பேச்சுவார்த்தை மூலம் மழுப்பி இழுத்தடிக்க பார்க்கிறது என்று எழுத்துப்பூர்வமாக எங்களுடைய ஆட்சேபனையை தெரிவித்துள்ளோம். இவற்றையெல்லாம் மத்திய தொழிலாளர் துறைக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளோம்.

என்எல்சியில் வரும் 15ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். அன்று தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு வேலை நிறுத்த போராட்ட தேதியை அறிவிப்போம். என்எல்சி தலைவர் பிரசன்னகுமார் கடந்த மாதம் கடலூரில் பேட்டி கொடுக்கும்போது, விவசாயிகளிடம் நிலங்களை கையகப்படுத்த முடியவில்லை. இப்போது 1,000 மெகா வாட் குறைவாக உள்ளது. எனவே, மெகாவாட் குறையும் நேரத்தில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தால் அதிகப்படியாக நஷ்டம் ஏற்படும். உற்பத்தியும் பாதிக்கப்படும் என்றார். ஏற்கனவே தமிழ்நாடு, புதுச்சேரிக்கு 800 மெகாவாட் கொடுக்கப்படுகிறது. வேலை நிறுத்தம் வந்தால், புதுச்சேரிக்கும், தமிழகத்திற்கும் மின்சாரம் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். என்றார்.

You may also like

Leave a Comment

4 + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi