எக்ஸ்பிரஸ் ரயில்களில் இருந்து தவறி விழுந்த 2 பேர் பலி: போலீசார் விசாரணை

வேலூர், ஜூலை 9: காட்பாடி வழியாக சென்ற ரயில்களில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலியாகினர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராகேஷ்குமார்(26), இவர் அவரது சகோதரனுடன் கேரள மாநிலம் அலுவாவில் தச்சு வேலை செய்வதற்காக தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தார். நேற்று முன்தினம் இரவு காட்பாடி அடுத்த திருவலம் அருகே வந்தபோது திடீரென ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த காட்பாடி ரயில்வே போலீசார் அங்கு வந்து ராகேஷ்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அதேபோல் பெங்களூரில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. வாலாஜா அடுத்த தலங்கை அருகே சென்றபோது ரயிலில் இருந்த சுமார் 60 வயது முதியவர் திடீரென தவறி விழுந்தார். படுகாயம் அடைந்த அவர் அங்கேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி