ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே ஆசிரமத்தில் மாணவி மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை அருகே வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் பூசாரி முனுசாமி என்பவர் ஆசிரமம் நடத்திவந்தார். இங்கு கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி நள்ளிரவு பூஜையில் கல்லூரி மாணவி ஹேமமாலினி தனது சகோதரியுடன் கலந்து கொண்டார். இதன்பிறகு ஆசிரமத்தில் மர்மமான முறையில் ஹேமமாலினி மரணம் அடைந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் மீனாட்சி தலைமையில், கடந்த ஒரு மாதமாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. இந்தநிலையில் பூசாரியை கைது செய்யக்கோரி திருவள்ளூர், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் ஆசிரமத்துக்கு சீல் வைக்கவேண்டும் என்றும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனிடையே மாணவியின் பெற்றோர் முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்தனர். இந்த நிலையில் மாணவியின் மர்ம மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று காஞ்சிபுரம் சரக காவல்துறை துணை தலைவர் சத்யபிரியா தெரிவித்துள்ளார்….